செய்திகள்
தேக்கு மர சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுகோள்
வடகிழக்கு மாநிலங்களில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய ரூ.11 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
திருப்பூர்:
நம் நாட்டின் மர தேவைகளுக்காக சால், படாக், தேக்கு போன்ற மரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதில் தேக்குமரம், ‘ராஜ மரம்‘ என்று அழைக்கப்படுகிறது.
இதற்குத்தான் அதிக விலையும் கிடைக்கிறது. தேக்கு விவசாயத்தில் விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். ஆனால் போதிய விழிப்புணர்வு இன்மை காரணமாக தேக்கு மரம் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவது அரிதாகவே உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் எண்ணெய் பனை சாகுபடி செய்ய ரூ.11 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதே போல பிற மாநிலங்களிலும் ஒவ்வொரு விவசாயியும் 10 சதவீதமாவது தேக்கு மரங்கள் நட வேண்டும் என்பதை அரசு முன்னெடுக்க வேண்டும்.
மரப்பயிர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசன மானியம், பயிர்க்கடன் கூட வழங்கப்படுவதில்லை. ஆனால் நஷ்டம் இல்லாமல் லாபத்தை பார்க்கும் தொழிலாக மரப்பயிர் சாகுபடி இருந்தபோதிலும் அதனை அரசு ஊக்குவிப்பதில்லை.
இனிமேலாவது அன்னிய செலாவணியை மிச்சப்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் தேக்கு மர சாகுபடிக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வேளாண் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.