செய்திகள்
விபத்து

செட்டிப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் 2 பேர் பலி

Published On 2021-09-05 10:06 GMT   |   Update On 2021-09-05 10:06 GMT
செட்டிப்பாளையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் நண்பர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செட்டிப்பாளையம்:

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் அமல் ராதாகிருஷ்ணன் (வயது 25). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த அக்‌ஷய் குமார் (25).

இவர்கள் 2 பேரும் லாரி சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதற்காக அடிக்கடி அவர்கள் கோவை வந்து வியாபாரிகளை சந்தித்து தங்கள் நிறுவன லாரியில் லோடு ஏற்ற வாய்ப்பு தருமாறு கேட்பார்கள்.

அதேபோல நேற்று காலை கோவை வந்து அவர்கள் 2 பேரும் வியாபாரிகளை சந்தித்தனர். பின்னர் பணி முடிந்ததும் இரவு கோவையில் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேரும் பாலக்காடு நோக்கி புறப்பட்டனர்.

பல்லடம்- செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை அவர்கள் முந்த முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே மினி லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மினி லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அமல் ராதாகிருஷ்ணன், அக்‌ஷய் குமார் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது.

விபத்து குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பலியான அமல் ராதாகிருஷ்ணன், அக்‌ஷய் குமார் ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News