செய்திகள்
அவிநாசி பகுதியில் குப்பைகளை திறந்தவெளியில் கொட்டினால் அபராதம் - பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை 100 சதவீதம் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சிகளின் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அவிநாசி:
அவிநாசி பேரூராட்சி 18 வார்டுகளில் 10 ஆயிரத்து 707 வீடுகள், 494 கடை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. தினமும் 11 முதல் 12 டன் குப்பை சேகரிக்கப்பட்டு கைக்காட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை 100 சதவீதம் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சிகளின் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட ஆலோசகர் ராஜசேகர் அவிநாசி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனை வழங்கினார்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்:
வீதிகள் தோறும் சென்று குப்பை சேகரிக்க 60 தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. 2 டிராக்டர், ஒரு பேட்டரி ஆட்டோவும் இப்பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார பணியில் 84 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வீடுகளிலேயே தரம் பிரித்து தள்ளுவண்டியில் வரும் தூய்மை பணியாளரிடம் நேரடியாக வழங்க வேண்டும். திறந்தவெளியில் கொட்டக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.300 வீடுகளுக்கு ஒரு மேற்பார்வையாளர் மூலம் இப்பணி கண்காணிக்கப்படும் என்றனர்.