செய்திகள்
தீ பிடித்து எரிந்த காரை தீயணைப்பு வீரரகள் அணைத்தனர்.

ஓ.பி.எஸ். துக்க வீட்டுக்கு வந்தவர்களின் கார் தீப்பிடித்து 4 பேர் படுகாயம்

Published On 2021-09-02 11:11 GMT   |   Update On 2021-09-02 11:11 GMT
திண்டுக்கல் அருகே ஓ.பி.எஸ். துக்க வீட்டுக்கு வந்தவர்களின் கார் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
செம்பட்டி:

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் இன்று பெரியகுளத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் வந்தனர்.

காரை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 53) என்பவர் ஓட்டி வந்தார். காரில் குத்தாலத்தைச் சேர்ந்த ராஜாராம் (51), கோபால் (58), தன்ராஜ் (43) ஆகியோரும் வந்தனர்.

கார் திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் செம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. சுதனாகியபுரம் பகுதியில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

உடனே காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் செம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் கார் முற்றிலும் எரிந்து தீயில் கருகியது. படுகாயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News