செய்திகள்
விபத்து

அன்னூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை - மகன் பலி

Published On 2021-09-02 04:08 GMT   |   Update On 2021-09-02 04:08 GMT
அன்னூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பூங்காரை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

திருமலைசாமியின் மனைவி தனது மகளுடன் வால்பாறையில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தார். அவர்களை அழைத்து வருவதற்காக திருமலைசாமி மோட்டார் சைக்கிளில் நேற்று காலை புறப்பட்டார். அவருடன் 6 வயது மகன் அரவிந்தனை பின்னால் அமர வைத்து சென்றார். மதியம் 12 மணியளவில் மோட்டார் சைக்கிள் அன்னூர்-கோவை ரோட்டில் கணேசபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது திருமலைசாமி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றார்.

அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது கண்இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமலைசாமி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் அரவிந்தன், காரில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருக்கையாள் (75) என்ற பெண் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். அருக்கையாள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News