செய்திகள்
காங்கேயத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
மேல் மடையில் தொடர் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் (பி.ஏ.பி.,) மொத்தம், 3.77 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. இந்தநிலையில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்க வேண்டிய அளவைவிட குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதாக கூறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போது 7 நாள் அடைப்பு, 7 நாள் திறப்பு எனும் நிலையில் 9 சுற்றுகள் வழங்க வேண்டிய நிலையில் இருந்து படிப்படியாக தண்ணீர் வழங்கும் நாட்களை குறைத்து விட்டனர்.
தற்போது மூன்று நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், மேல் மடையில் தொடர் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கயத்தில் பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். ஆனால் உடன்பாடு ஏற்படாத நிலையில் உடுமலை பி.ஏ.பி., செயற்பொறியாளர் கோபி, காங்கயம் செயற்பொறியாளர் அசோக் பாபு ஆகியோரை பாசன விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் செய்தனர்.
தங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும். குளறுபடிகளை களைந்து தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.