செய்திகள்
வீரபாண்டி அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
வீரபாண்டி அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது37). விவசாயி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் உப்புக்கோட்டை அருகே பாலார்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் அவர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நெக்லஸ், மோதிரம் உள்பட 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபு வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.