வீரவநல்லூர் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு சரமாரி வெட்டு- கணவர் வெறிச்செயல்
வீரவநல்லூர்:
சேரன்மகாதேவி அருகே உள்ள கீழ கல்லூரை சேர்ந்தவர் சுப்புக்குட்டி(வயது 32). இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருணா(30). வீரவநல்லூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். சுப்புக்குட்டி அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருணா அவரை பிரிந்து வீரவநல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் இரவு பணியை முடித்துவிட்டு அருணா வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்புகுட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றியதில் சுப்புக்குட்டி தான் வைத்திருந்த அரிவாளால் அருணாவை சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார். இதில் அருணாவின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அருணா சரிந்து விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாவை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுப்புக்குட்டியை தேடிவருகிறார்.