செய்திகள்
விசைத்தறியாளர்களுக்கான கூலி உயர்வு-மீண்டும் இழுபறி
கடந்த மாதம் 29-ந் தேதி மீண்டும் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்பூர்:
7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஒப்பந்த கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
கடந்த மாதம் 29-ந் தேதி மீண்டும் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் இரண்டு மாவட்ட விசைத்தறியாளர்கள் பங்கேற்க ஜவுளி உற்பத்தியாளர்கள் 2 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடந்தது.
திருப்பூர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த பேச்சில் விசைத்தறி சங்க தலைவர்கள், வேலுசாமி, பழனிசாமி, செயலாளர் பாலசுப்ரமணியம், ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் பங்கேற்றனர். அப்போது கூலி உயர்வு குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக சங்க நிர்வாகிகள் கூறினர்.
இதனால் வருகிற 27-ந்தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதில் பல்லடம், சோமனுர், தெக்கலூர், அவிநாசி, மங்கலம், 63 வேலம்பாளையம் பகுதி விசைத்தறி சங்கத்தினர் பங்கேற்றனர். ‘இழுத்தடிக்காமல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என விசைத்தறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.