செய்திகள்
திருச்செந்தூர் ரவுண்டானா சாலை முன்பு பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தரிசனத்திற்கு தடைவிதித்ததால் திருச்செந்தூரில் பக்தர்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2021-08-01 07:11 GMT   |   Update On 2021-08-01 07:11 GMT
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் (3-ந் தேதி) வரையிலும், ஆடி அமாவாசை தினமான 8-ந்தேதியும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
திருச்செந்தூர்:

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 5 -ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆடி மாதத்தில் ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொரானா தடுப்பு நடவடிக்கையாக ஆடிமாத திருவிழாக்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் நாளை மறுநாள் (3-ந் தேதி) வரையிலும், ஆடி அமாவாசை தினமான 8-ந்தேதியும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு தெரிவித்து.

இரவு அறிவிக்கப்பட்டதால் இதையறியாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வழக்கம் போல ஏராளமான பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது.

அப்போது தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு உள்ள நுழைவாயில் முன்பு போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் ரவுண்டானா சாலை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பக்தர்கள் தங்களை கோவில் நுழைவாயில் முன்பு வரை அனுமதி வழங்கினால் கோபுர தரிசனம் செய்து விட்டு செல்வதாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News