செய்திகள்
பிளஸ்-2 மறுதேர்வு-திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை
பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடம் இருந்து 27-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
திருப்பூர்:
பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியாகின.
இதில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடம் இருந்து 27-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 95 தனித்தேர்வர்கள் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மேலும் பிளஸ்-2 மதிப்பெண்களில் திருப்தி இல்லையென மாவட்டத்தில் யாரும் இதுவரை விண்ணப்பிக்கவில்லை.
இவர்கள் துணைத்தேர்வு எழுதும் பட்சத்தில் அனைத்து பாடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் எவரும் விருப்பம் காட்டவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.