செய்திகள்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க சுமைப்பணி தொழிலாளர்கள் வேண்டுகோள்
புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்கத்தினர் காலம் கடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் சி.ஐ.டி.யூ. லாரி டிரான்ஸ்போர்ட் சுமைப்பணி தொழிலாளர்கள் சிறப்பு பேரவைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ., சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். இதில் லாரி டிரான்ஸ்போர்ட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு முந்தைய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்கத்தினர் காலம் கடத்தி வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு வழங்குவதற்கு உரிமையாளர் சங்கத்தினர் முன்வர வேண்டும்.
மேலும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.