செய்திகள்
கோப்புப்படம்

அவிநாசிதிருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர வாய்ப்பு சரியான திட்டமிடலுடன் செயல்படுத்த வலியுறுத்தல்

Published On 2021-07-27 08:06 GMT   |   Update On 2021-07-27 08:06 GMT
ஒவ்வொரு பிரிவிலும் தேவையான அலுவலர்கள், ஊழியர்களை பணியமர்த்தி நிர்வாகப்பணிகள் தடையின்றி மேற்கொண்டால் நகரின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
அவிநாசி:
 2011 மக்கள் தொகை அடிப்படையில் அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் நகரின் உட்கட்டமைப்பு முதற்கொண்டு மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தியாகும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் , பேரூராட்சி நிர்வாகம் மூலம் கிடைக்கும் நிர்வாக வசதி, நகராட்சி நிர்வாகத்தில் கிடைக்காது என்ற கருத்து மற்றொரு புறம் நிலவுகிறது.

இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாக நிலையை நன்கறிந்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

மக்கள் தொகை ,தொழில் வளர்ச்சி, குடியிருப்புகள் எண்ணிக்கைக்கு ஏற்ப  உள்ளாட்சி நிர்வாகங்கள் தரம் உயர்த்தப்படுவதும், அதன் மூலம் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதும் அவசியமானதுதான். அதே நேரம் தரம் உயர்த்தப்படும் அந்தஸ்துக்கு ஏற்ப அனைத்து பணிகளும் மிகச்சரியாக நடக்க வேண்டுமென்றால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். 

நகராட்சி கட்டமைப்பில் கமிஷனர் அந்தஸ்தை பெற்ற அதிகாரியின் கட்டுப்பாட்டில் சுகாதாரப்பிரிவு, கட்டிட அனுமதி விவகாரங்களை கவனிக்க நகரமைப்பு பிரிவு, நில அளவை பிரிவு, குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள பொறியியல் பிரிவு என பல பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் தேவையான அலுவலர்கள், ஊழியர்களை பணியமர்த்தி நிர்வாகப்பணிகள் தடையின்றி மேற்கொண்டால் நகரின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பல்வேறு பேரூராட்சிகளின் நிலை இன்று மேம்பட்டதாக இல்லை. பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. 

அடிப்படை வசதிகள் தேங்கி கிடக்கின்றன என்ற புகார் இருந்து வருகிறது. நீர்நிலை, குளம் குட்டை, அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகமுள்ள அவிநாசி, திருமுருகன்பூண்டி போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமேஉட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும்.  திருமுருகன்பூண்டி பேரூராட்சியில்  தற்போதுள்ள சிறப்பு நிலை அந்தஸ்துக்கு ஏற்ப பணியாளர் பணியிடம் இதுவரை உருவாக்கப்படவில்லை.

எனவே, சரியான திட்டமிடல் மூலம் பேருராட்சிகளின் அந்தஸ்தை மாற்றியமைப்பதன் மூலம் மட்டுமே அதன் பலன் கிடைக்கும். இவ்வாறுஅவர்கள் கூறினர்.
Tags:    

Similar News