செய்திகள்
கோப்புபடம்

முத்துப்பேட்டையில் கல்லூரி மாணவி தலையில் அம்மியை போட்டு படுகொலை - வாலிபர் கைது

Published On 2021-07-25 10:09 GMT   |   Update On 2021-07-25 10:09 GMT
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை, ஜூலை.25-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் மோனிகா (வயது 18). இவர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை பகுதியில் தனது பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக இவர் தினமும் பஸ்சில் திருச்சிக்கு சென்று வருவார். தற்போது ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டதால் உறவினர் வீட்டிலே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மோனிகாவின் உறவினரான முத்துப்பேட்டை அடுத்த திருக்களார் கிராமத்தை சேர்ந்த பொதியப்பன் மகன் சிவசங்கரன் (28) என்பவர் இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார் . இவர் மோனிகாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து மோனிகாவை பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவசங்கரன் நேற்று நள்ளிரவில் ராஜகுமாரி வீட்டுக்குள் புகுந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மோனிகாவின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் மோனிகா துடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி ராஜகுமாரி அலறல் சத்தம் அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் மோனிகாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மோனிகா இறந்தார்.

இதற்கிடையே அம்மிகல்லை போட்டு தப்பி ஓட முயன்ற சிவசங்கரனை அப்பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து முத்துப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒருதலைக் காதலால் நடைபெற்ற கொலை சம்பவத்தால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. * * * கைது செய்யப்பட்ட சிவசங்கரன்.

Tags:    

Similar News