செய்திகள்
நீடாமங்கலம் அருகே மொபட் மீது வேன் மோதி பெண் பலி
நீடாமங்கலம் அருகே மொபட் மீது வேன் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே உள்ள பெரம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த சுவாமிநாதன் மனைவி சின்னப்பொன்னு (வயது40). நேற்று இவர் தஞ்சை சென்று விட்டு வீட்டுக்கு உறவினர் ஒருவரின் மொபட்டில் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். கோவில்வெண்ணி பகுதியில் பின்னால் வந்த ஆம்னி வேன் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னப்பொன்னு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.