விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டது கண்டுபிடிப்பு - பெரியநாயக்கன் பாளையம் சார்பதிவாளர் சஸ்பெண்டு
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி நேற்று முன்தினம் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகமானோர் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம், எங்கிருந்து சம்பளம் வழங்குகிறீர்கள் என பதிவாளரிடம் கேட்டார். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் ஊழியர்களை இவரே பணிக்கு அமர்த்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பதிவாளரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை ஐ.ஜிக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி பதிவாளர் ராமமூர்த்தியிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதும், முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சார்பதிவாளர் ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐ.ஜி.சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
பெரியநாயக்கன் பாளையம் சார்பதிவாளர் ராமமூர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவரவே, தமிழ்நாடு சிவில் சர்வீஸ் 17 இ விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. அவர் தலைமை அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதி இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.