சங்கரன்கோவில் அருகே விபத்து: போலீஸ்காரர் பலி
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தனபாண்டி. இவரது மகன் மாரிசாமி(வயது 27). இவர் சிவகிரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
நேற்று மாரிசாமி நெல்லைக்கு பாதுகாப்பு பணிக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். சங்கரன்கோவிலை அடுத்த மேலநீலிதநல்லூரில் உள்ள ஒரு கல்லூரி அருகே சென்றபோது எதிரே கார் ஒன்று வந்தது.
காரை தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்தார். அப்போது மாரிசாமியின் மோட்டார் சைக்கிள் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரிசாமி தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை மாரிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.