செய்திகள்
ஆன்லைன் வகுப்பு-ஏழை மாணவர்களுக்கு உதவும் ஆசிரியர்கள்
எவரேனும் குழுவில் இருந்து வெளியேறி இருந்தால் அவர்களைத் தொடர்பு கொண்டு, அதற்கான காரணம் கேட்டறியப்படுகிறது.
உடுமலை:
அரசுப்பள்ளிகளில் கல்வித்தொலைக்காட்சி, செல்போன் ‘வாட்ஸ்ஆப்’ வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு, வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் செல்போனில் வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறியவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உடுமலை கல்வி மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், கட்டுமானம், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தினக்கூலியாகச் செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சில அரசுப்பள்ளிகளில் ஜூம், கூகுள் மீட் உள்ளிட்ட இணையதளங்கள் வழியே ஆன்லைன் வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பதிவு உறுதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பணிக்குச்செல்லும் மாணவர்கள் கல்வி ஆர்வம் குறைந்து அவர்கள் பள்ளி இடைநிறுத்தம், படிப்பில் கவனக்குறைவு உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாக நேரிடும். ஆசிரியர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே உணர்த்தி வருகின்றனர். அதன்படி வாரம்தோறும் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எவரேனும் குழுவில் இருந்து வெளியேறி இருந்தால் அவர்களைத் தொடர்பு கொண்டு, அதற்கான காரணம் கேட்டறியப்படுகிறது.
மொபைல் வசதி இல்லாதவர்களுக்கு உடன் பயிலும் சக மாணவர்களால் உதவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் அவ்வப்போது இணையதளங்கள் பயன்படுத்தி மாணவ, மாணவியரின் பதிவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.