செய்திகள்
80 சதவீத தொழிலாளர்கள் வருகை-திருப்பூரில் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னலாடை நிறுவனங்கள்
கொரோனா 2-வது அலை உருவானதையடுத்து கடந்த மே மாதம் முழுவதும் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூரில் 5ஆயிரத் திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு வெளிமாவட்ட தொழிலாளர்களும், ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் போன்ற வெளிமாநில தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா 2-வது அலை உருவானதையடுத்து கடந்த மே மாதம் முழுவதும் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி முதல் குறைந்த தொழிலாளர்களுடன் மீண்டும் இயக்கத்தை தொடங்கின.
உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் கடந்த 28-ந்தேதி முதல் 33 சதவீத தொழிலாளருடன் இயங்க தொடங்கின. இதையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து நிறுவனங்களும் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கி வருகின்றன.
பொதுபோக்குவரத்து தொடங்கியதால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்தடைந்துள்ளனர். 80 சதவீத தொழிலாளர்கள் திரும்பியுள்ளதால் கொரோனா ஊரடங்கால் இழந்தவர்த்தகத்தை மீட்டெடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்களும் மும்முரமாக ஆடைதயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. இது தொழில் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியைஏற்படுத்தி உள்ளது.