மதுரை அருகே பேக்கரி கடைக்குள் லாரி புகுந்தது- மோட்டார் சைக்கிள்கள் சேதம்
மதுரை:
மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வரிச்சியூர் பஸ் நிறுத்தம் அருகே ஏராளமான பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கூடுவது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல பொதுமக்கள் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பேக்கரி கடையின் முன்புள்ள டீக்கடை முன்பு நின்று டீ குடித்தனர்.
அப்போது சிவகங்கை பகுதியில் இருந்து மதுரை நோக்கி வந்த செங்கல் ஏற்றிய லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேக்கரி கடைக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
லாரி இடித்து தள்ளியதில் பேக்கரி கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. தறிகெட்டு வந்த லாரியை பார்த்து பொதுமக்கள் ஓடியதால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். லாரியை ஓட்டிவந்த டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பட்டப்பகல் நேரத்தில் டீக்கடைக்குள் லாரி புகுந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.