ஆலங்குளம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- சகோதரர்கள் கைது
ஆலங்குளம்:
ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29).
இவர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெயக்குமாரின் இடத்திலிருந்த செடியை அருள்முருகன் குடும்பத்தினர் வெட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை ஜெயக்குமாரின் நண்பர் திலீப் தடுக்க முற்பட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் இருந்த அருள் முருகன் மற்றும் அவரது சகோதரர் லிங்கசாமி ஆகிய 2 பேரும் ஜெயக்குமார், திலீப் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஊத்துமலை போலீசார் அருள் முருகன், லிங்குசாமி மற்றும் அவரது சகோதரி சரஸ்வதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட அருள்முருகன் மற்றும் லிங்குசாமியை கைது செய்தனர்.