ஆலங்குளம் அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஆலங்குளம்:
கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து. இவரது மகன் வள்ளிகுமார் (வயது28). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
வள்ளிகுமார் தனது நண்பர்களுடன் இரவு நேரங்களில் வேட்டைக்கு செல்வது வழக்கம். நேற்றிரவு ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளத்தை சேர்ந்த தனது நண்பர்களுடன் வள்ளி குமார் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு குருவன் கோட்டை- துத்திக்குளம் சாலையில் ஒக்கநின்றான் பொத்தை மலையடிவாரத்தில் சென்றுள்ளார்.
அப்போது குருவன் கோட்டையை சேர்ந்த பால் ராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த விலங்கை பிடிப்பதற்காக வள்ளிகுமார் சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளின் அட்டகாசம் காரணமாக பால்ராஜ் தனது தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்தார்.
அந்த மின் வேலியில் எதிர்பாராதவிதமாக வள்ளிகுமார் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வள்ளிகுமாரின் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் வள்ளி குமார் மற்றும் அவரது நண்பர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு வந்ததாக கூறப்படுகிறது.
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த வள்ளிகுமாருக்கு, சரண்யா (25) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.