செய்திகள்
மக்காச்சோள விதை

முளைப்பு திறன் குறைந்த மக்காச்சோள விதைகள்-மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

Published On 2021-07-04 07:25 GMT   |   Update On 2021-07-04 07:25 GMT
விதை உற்பத்தி நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு மக்காச்சோள பயிரின் மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர்.
தாராபுரம்:

தாராபுரத்தை அடுத்த அலங்கியம், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் 120 நாட்களில் பலன் தரும் மக்காச்சோள பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில்  அலங்கியம் கிராமம் வட்டமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லமுத்து, துரைசாமி ஆகியோர் அலங்கியம் கிராமத்தில் உள்ள தனியார் விதை விற்பனை கடை ஒன்றில் தலா 4 கிலோ மக்காச்சோள விதைகளை ரூ.1500க்கு  வாங்கி தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலங்களில் நடவு செய்தனர்.

நடவு செய்த 10 நாட்களில் முளைத்து வந்த மக்காச்சோளம் பயிர்களில் செடிகளில் முளைப்பு  திறன் குறைந்திருந்தது. இதேபோல் இப்பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விதைகளை விற்பனை செய்த நிறுவனத்திடம் புகார் கூறினர். 

அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை விதை உற்பத்தி நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு மக்காச்சோள  பயிரின் மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர். இதன் பின் பல மாதங்களாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்னும் 1 வாரங்களில் மக்காச்சோள பயிர்களை அறுவடை செய்ய வேண்டிய தருணத்தில் முளைப்புத்திறன் குறைந்த மக்காச்சோள விதைகளை பயிரிட்டதால் மக்காச் சோள பயிர்களில் பாதிக்கு மேல் குறைந்த அளவுமணிகளுடன் உள்ளது.

நன்றாக விளைந்த மக்காச்சோள காடுகளில் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 30 மூட்டைகள் மகசூல் கிடைத்துள்ளது. முளைப்புத் திறன் குறைந்த மக்காச் சோள விதைகளை நடவு செய்ததால் ஏக்கருக்கு 5 மூட்டைகள் கூட கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை விற்பனை நிலையம் ,உற்பத்தி நிறுவனம் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும். முளைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்த கடைகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்காச்சோள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News