செய்திகள்
ஜெய்ஹிந்த் அவமதிப்பு-ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு சிவசேனா கண்டனம்
ஜெய்ஹிந்த் என்ற சொல்லை முதன் முதலில் உச்சரித்தவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்
திருப்பூர்:
திருப்பூரில் சிவசேனா இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவருமான ஈ.ஆர். ஈஸ்வரன், கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டதால் தமிழகம் தலை நிமிர்ந்து விட்டதாக பேசி இருப்பது அபத்தம் . ஜெய்ஹிந்த் என்பது எந்த கட்சியையும் சேர்ந்த கோஷம் இல்லை.சுதந்திர போராட்டத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்த பயன்படுத்திய சொல்.நமது நாட்டை நேசிப்பவர்களும் தேசத்தை காக்கும் ராணுவ வீரர்களும் பயன்படுத்தும் சொல் ஜெய்ஹிந்த்.
ஜெய்ஹிந்த் என்ற சொல்லை முதன் முதலில் உச்சரித்தவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்.ஒரு தமிழரின் வார்த்தையை ஆளுநர் உரையில் தவிர்த்து தமிழகம் தலை நிமிர்ந்து விட்டது என பேசியிருப்பது செண்பகராமன் பிள்ளையையும் , சுதந்திர போராட்ட வீரர்களையும்,தேசபக்தர்களையும் இழிவுப்படுத்தியுள்ளார்.இதற்காக ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. வை சிவசேனா கட்சி வன்மையாக கண்டிக்கின்றது .
ஈஸ்வரன் பேசியதை சட்டமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பிரகாஷ் , வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கவின்,கிழக்கு மாநகர இளைஞரணி செயலாளர் ராதா.சுதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.