செய்திகள்
அமராவதி ஆற்றில் முட்செடிகள் ஆக்கிரமிப்பு
சீமை கருவேல மரங்கள் உடுமலையில் இருந்து கரூர் வரை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் வளர்ந்து உள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றுப்பாசனத்தின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆற்று பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, தக்காளி, கத்தரிக்காய், பீட்ரூட் உட்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஆற்றின் மூலம் உடுமலை, தாராபுரம், மூலனூர், வெள்ளகோவில் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் பழைய ஆற்றுபாலத்தின் அருகே ஆற்றின் மையப்பகுதி மற்றும் கரையோர பகுதிகளில் முட்புதர்கள் ஏராளமாக வளர்ந்து உள்ளன.
இதனால் அந்த பகுதியில் ஆற்றின் பரப்பளவு குறைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் தண்ணீர் போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது. மேலும் சீமைகருவேல முட்கள் தண்ணீரை உறிஞ்சி கொள்வதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறட்சி காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது போன்று சீமை கருவேல மரங்கள் உடுமலையில் இருந்து கரூர் வரை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் வளர்ந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அமராவதி ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல முட்புதர்களை அகற்ற வேண்டும் என தாராபுரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.