செய்திகள்
பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்த கவிதை-கட்டுரை போட்டி நடத்த திட்டம்
உடுமலை கல்வி மாவட்டத்தில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உடுமலை:
பள்ளிகள் திறக்காமல் உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இது போன்ற வகுப்புகள் காலை முதல் மாலை வரை வழக்கமான பள்ளி நேரங்களை போலவே நடத்தப்படுகின்றன.
அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் செல்போனில் வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் கற்பிக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதோடு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறியவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகளை நடத்த ஆசிரியர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்:
செல்போனில் பல மணி நேரம் பாடங்களை கவனிக்க வேண்டியுள்ளது. நேரடி வகுப்புகள் இல்லாமல் பலரும் கல்வியில் நாட்டமின்றி உள்ளனர்.தொடர்ந்து பாடங்கள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.