செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது-இந்து முன்னணி தலைவர் பேட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு திறமையாக செயல்படுகிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கயத்துக்கு வந்த அவர் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கயம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.இது தவிர இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் ஒரு கோவில் இடத்தை மீட்டுள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும் பல இடங்களில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமாக ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் உள்ளது.
அந்த இடத்தை தனியார் பால் நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்து அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்குள்ள பால் நிறுவனத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.