செய்திகள்
முகமது இட்ரீஸ்

விழுப்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 வியாபாரிகள் கைது

Published On 2021-06-23 03:24 GMT   |   Update On 2021-06-23 03:24 GMT
விழுப்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் கமலா நகர் பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று காலை விழுப்புரம் கமலா நகர் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 15 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அந்த சாக்கு மூட்டையினுள் 64 ஆயிரத்து 62 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே அந்த வீட்டில் இருந்து வெளியே தப்ப முயன்ற ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த முகமதுஇட்ரீஸ் (வயது 51) என்பதும், வியாபாரியான இவர் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்து விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது இட்ரீசை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான முகமதுஇட்ரீஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முகமது இட்ரீஸ் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையை சேர்ந்த வியாபாரியான முகமது இஸ்மாயில்(44) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளுக்கு சப்ளை செய்ய பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News