செய்திகள்
மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை வேகமெடுத்ததால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. எனினும் சில பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், பிற பள்ளிகளுக்கு செல்வதற்கு மாற்று சான்றிதழ் வழங்குதல், பாடப்புத்தகம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது.
நோய் தொற்று முழுமையாக குறைந்து பள்ளிகள் திறப்பதற்கு இடையே ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்துவதற்கு வசதியாக மாணவ- மாணவிகளுக்கு தேவையான விலையில்லா பாடப்புத்தகங்களை முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி என 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 975 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாட நூல் கழகத்திலிருந்து அந்தந்த கல்வி மாவட்டத்துக்கு வந்துள்ளது. பின்னர் அங்கிருந்து தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.