செய்திகள்
கோப்புப்படம்

முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

Published On 2021-06-19 09:08 GMT   |   Update On 2021-06-19 09:08 GMT
குருவிகுளத்தில் முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள குளக்கட்டாக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணபிரான். இவரது மனைவி செல்வராணி(வயது28). 

இவர் நேற்று காலை தனது வீட்டில் குப்பைகளை அள்ளிக்கொண்டு ஊருக்கு வடக்கே உள்ள குளக்கரையின் அருகே உள்ள குப்பை கிடங்கில் போட சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் வந்தார்.

அவர் செல்வராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை நோட்டமிட்டார். அக்கம் பக்கத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட அந்த நபர் செல்வராணி அருகில் சென்றார்.

அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட செல்வராணி நகையை இறுக பிடித்துக் கொண்டார். திருடன் திருடன் என்று அவர் கூச்சலிட்டதும், மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

ஆனாலும் செல்வராணியின் கழுத்தில் நகையை இழுத்ததால் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துமனையில் செல்வராணியை சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News