செய்திகள்
தக்காளி பழங்களுக்குள் மறைத்து கடத்தல்-80 மதுபாட்டில்கள் பறிமுதல்
காய்கறி வியாபாரியான ராஜூ என்பவரின் கடைக்கு பெங்களூரில் இருந்து தக்காளி பழங்கள் ஏற்றி வந்த லோடு வாகனத்தில் சோதனையிட்டனர்.
திருப்பூர்:
கொரோனா தொற்று பாதிப்பு குறையாததால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட மதுபிரியர்கள் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுவாங்கி வருகின் றனர். அதனை தடுக்க திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் திருப்பூருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக புகார்கள் எழுந்ததையடுத்து போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி கடத்தல் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தக்காளி பழங்களை ஏற்றி வந்த லோடு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காய்கறி வியாபாரியான ராஜூ என்பவரின் கடைக்கு பெங்களூரில் இருந்து தக்காளி பழங்கள் ஏற்றி வந்த லோடு வாகனத்தில் சோதனையிட்டனர். அப்போது தக்காளி பழங்களுக்கு இடையே மறைத்து மதுபாட்டில்கள் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் காய்கறி வியாபாரி ராஜூ, லோடு வாகன டிரைவர் முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.