செய்திகள்
முட்டைகோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
முட்டைகோஸ் பயிரை பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.
உடுமலை:
மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய உடுமலை பகுதி கிராமங்களில் உள்ள குளிர்ந்த வானிலை முட்டைகோஸ் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. அதனடிப்படையில் தற்போது முட்டைகோஸ் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,
ஒரு ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்ய 250 கிராம் விதைகள் போதுமானது. நாற்றங்கால் அமைத்து தொழுஉரம், மண்புழு உரம் போன்றவற்றை போட்டு விதைப்படுக்கை அமைக்கிறோம். அதில் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைகளை நடவு செய்ய வேண்டும். பின்னர் நாற்றுக்களைப் பிடுங்கி தயார்படுத்தப்பட்ட நிலத்தில் 40 செ.மீ., இடைவெளியில் நடவு செய்கிறோம்.
முட்டைகோஸ் பயிரை பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும்.
பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப்புழுக்கள் தாக்குதல் இருக்கும். இதுதவிர இலைப் புள்ளி நோய், இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.
எனவே அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத்துறையினரின் பரிந்துரை பெற்று தெளிப்பது சிறந்தது. முட்டைகோஸை நடவு செய்த 75 நாளில் அறுவடை செய்யத்தொடங்கலாம். சுமார் 120 நாட்கள் வரை 8 முறை அறுவடை செய்யலாம். இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14 டன் வரை மகசூல் கிடைக்கும்.
மலைப்பகுதிகளில் இதை விட 3 மடங்கு மகசூல் கிடைக்கும் என்றாலும் சமவெளியிலும் முட்டைகோஸ் சாகுபடி லாபகரமானதாகவே உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.