நெல்லையில் சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது வழக்கு
நெல்லை:
நெல்லை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானூர் ஒன்றிய அ.தி.மு.க. என்ற பெயரில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மட்டும் வாசகங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மற்றொரு நோட்டீஸ் ஒட்டினார்கள். இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மானூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் லட்சுமண பெருமாள், பெயர் குறிப்பிடாமல் நோட்டீஸ் ஒட்டியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி மானூர் போலீசில் புகார் செய்தார்.
மானூர் போலீசார் விசாரணை நடத்தி, பொது இடத்தில் பிரச்சனைக்குரிய நோட்டீஸ் ஒட்டியதாக ரஸ்தாவை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மாயகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.