செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பெற்ற இளம்பெண்

Published On 2021-06-12 08:17 GMT   |   Update On 2021-06-12 08:17 GMT
கோவையில் 108 ஆம்புலன்சில் இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

கோவை:

கோவை, வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சபானா(20). நிறைமாத கர்ப்பிணி. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல தயாரானார். சபானாவின் கணவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரதாப், பைலட் அந்தோணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த பெண் மேல் தளத்தில் இருந்ததால், உடனடியாக அவர்கள் 2 பேரும் மேலே சென்று இளம் பெண்ணை பத்திரமாக கீழே ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர்.

அந்த சமயத்தில் பெண்ணுக்கு வலி அதிகமானது. இதையடுத்து ஊழியர்கள் பிரதாப் மற்றும் பைலட் அந்தோணி ஆகியோர் இளம்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றினர்.

பின்னர், அவசர காலம் கருதி ஆம்புலன்சில் வைத்தே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

Tags:    

Similar News