செய்திகள்
தேனி அருகே கொரோனாவுக்கு பலியானவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
தேனி அருகே கொரோனாவுக்கு பலியானவரின் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அல்லிநகரம்:
தேனி அருகே அன்னஞ்சி விலக்கு ஈஸ்வர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி சாந்தி (வயது 37). இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கார்த்திக் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார்.
அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 5-ந்தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து சாந்தி தனது மகனுடன் பெரியகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், தனது கணவரின் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக சில ஆவணங்களை எடுப்பதற்காக நேற்று முன்தினம் அவர் தனது தம்பி வாசுதேவனுடன் அங்கு வந்தார். அப்போது வீட்டு கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த 3 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் மற்றும் மிக்சி ஆகியவை திருடு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.