செய்திகள்
வாட்ஸ்அப்

வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படம் அனுப்பி பெண்ணுக்கு மிரட்டல்

Published On 2021-06-03 13:03 GMT   |   Update On 2021-06-03 13:03 GMT
தூத்துக்குடியில் 37 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படம் அனுப்பி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க பெண்ணின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த 22-ந் தேதி ஒரு மர்ம நபரின் செல்போனில் இருந்து சில புகைப்படங்கள் வந்தன. அதில் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து அந்த மர்மநபர் இதேபோன்று ஆபாச புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்தார். மேலும் ஆபாச வார்த்தைகளையும் கடந்த 1-ந் தேதி வரை அனுப்பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்தார்.

அவர், சம்பந்தப்பட்ட மர்ம நபரை கைது செய்ய தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்களை அனுப்பியவரின் முகவரியை கண்டுபிடித்தனர். அப்போது, ஆபாச படங்களை அனுப்பியது தூத்துக்குடி நாட்டுக்கோட்டை செட்டி தெருவை சேர்ந்த கிளமெண்ட் மகன் ஆனந்தராஜ் (வயது 32) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் ஆனந்தராஜை அதிரடியாக கைது செய்து, செல்போனையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் ஆனந்தராஜிக்கு அந்த பெண்ணின் ஆபாச புகைப்படம் எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News