நெல்லை அருகே 16 வயதில் கர்ப்பம்: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் மீது வழக்கு
நெல்லை:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நடந்தது. இருவரது பெற்றோரின் ஏற்பாட்டில் சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தை வளர்ச்சி சரியாக உள்ளது எனவும் கூறி உள்ளார்.
இதற்கிடையே அந்த சிறுமியின் வயது 18-க்கும் கீழாக இருப்பதாக சந்தேகம் அடைந்த டாக்டர்கள் ராதாபுரம் வட்டார சமூகநலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பரிசோதனையின்போது சிறுமி எழுதிக்கொடுத்த ஆவணத்தை அவர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் சிறுமியின் வயது 16 என்பது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியின் கணவர் மற்றும் 2 பேரின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.