செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை - ஐகோர்ட்டு அதிரடி கருத்து

Published On 2021-06-01 21:06 GMT   |   Update On 2021-06-01 21:06 GMT
விலை உயர்வை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்கை ரத்துசெய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன போராட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் அவர்கள் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை எழும்பூர் குற்றவியல் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில், கம்யூனிஸ்டு கட்சிகளின் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகள் குமார், வீரபாண்டியன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் 4 பேரும் வரும் 7-ம் தேதி ஆஜராக வேண்டும் என கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனுக்கு தடைவிதிக்க வேண்டும், தங்கள் மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை. அதனால் மனுதாரர்கள் மீதான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல. இந்த வழக்கை ரத்துசெய்கிறேன்’ என உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News