செய்திகள்
மரணம்

வாழப்பாடி அருகே ஏரியில் மூழ்கி அக்காள்-தம்பி பலி

Published On 2021-05-30 08:11 GMT   |   Update On 2021-05-30 08:11 GMT
உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றிருந்த நேரத்தில், அக்காள், தம்பி ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு. இவர்களது மகள் சந்திரமுகி (வயது 15). ஏத்தாப்பூர் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பும், மகன் பரணிலேசன் (13) 8-ம் வகுப்பும் படித்து‌ வந்தனர்.

கமலக்கண்னன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் குழந்தைகள் தாயின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் அலமேலும் தனது மகன், மகளை அழைத்துக் கொண்டு, புத்திரகவுண்டன்பாளையம் தேவேந்திரபுரம் பகுதியிலுள்ள உறவினர் லட்சுமி வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார்.

அப்போது சந்திரமுகி, பரணிலேசன் இருவரும் அருகிலுள்ள புத்திர கவுண்டன்பாளையம் சம்பேரிக்கு சென்றனர். ஏரிக்குள் இறங்கிய இருவருக்கும் நீச்சல் தெரியாததால், இருவரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர.

ஏரிக்கு சென்ற மகன், மகளை காணாமல் தவித்த அலமேலு உறவினர்களுடன் சென்று பார்த்தார். அங்கு இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரமுகி, பரணிலேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றிருந்த நேரத்தில், அக்காள், தம்பி ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News