பீளமேட்டில் மது விற்ற வாலிபர் கைது
கோவை:
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. மது கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடுவதோடு சிலர் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
நேற்று கோவையில் இருவேறு இடங்களில் டாஸ்மாக் கடையை உடைத்து 2000-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீசார் டாஸ்மாக் கடை இருக்கும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கோவையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீளமேடு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக்( வயது 25) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 101 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.