செய்திகள்
தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி சென்னை மெரினாவில் வாகனங்களை மடக்கி போலீசார் விசாரணை செய்த காட்சி.

சென்னையில் 3 நாட்களில் 11 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

Published On 2021-05-26 06:28 GMT   |   Update On 2021-05-26 06:28 GMT
சென்னையில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் எண்ணிக்கை குறையாமலேயே உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

வருகிற 31-ந்தேதி வரை அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலமும் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். இதற்காக வாகன சோதனையும் நடத்தி வருகிறார்கள்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் பலர் வெளியில் சுற்றுவது தொடர்கிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக நேற்று 2,409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மே 22-ந்தேதியன்று 4 ஆயிரத்து 680 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. 23-ந் தேதியன்று 3,980 வழக்குகள் போடப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கார்- ஆட்டோக்களும் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுகின்றன. அந்த வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். இருப்பினும் அதிகளவில் இருசக்கர வாகனங்களே கைப்பற்றப்பட்டு வருகிறது.

நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாமல் சுற்றிய 1,946 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News