செய்திகள்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் திருவாரூரில், 1,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
திருவாரூர்:
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் திருவாரூரில், 1,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தினை அறிவித்து, அதற்கென தனித்துறையை உருவாக்கி உள்ளார்.
இந்த திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பொதுவான அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய துறைகளுக்கு தனித்தனியே பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, நாகை எம்.பி. செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதல் கட்டமாக 1,300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் தேவா, திட்ட இயக்குனர் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.