செய்திகள்
பேரளம் அருகே ஊரடங்கை மீறியவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கபசுர குடிநீர் வழங்கியபோது எடுத்தபடம்.

பேரளம் அருகே, ஊரடங்கை மீறி சாலையில் வீணாக சுற்றியவர்களை கபசுர குடிநீர் குடிக்க வைத்த போலீசார்

Published On 2021-05-20 14:51 GMT   |   Update On 2021-05-20 14:51 GMT
பேரளம் அருகே ஊரடங்கை மீறி சாலையில் வீணாக சுற்றியவர்களை போலீசார் கபசுர குடிநீர் குடிக்க வைத்தனர்.
நன்னிலம்:

கொரோனா 2-வது அலையின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிர் பலியும் அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகமெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காலை 10 மணியுடன் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைகள் மூடப்பட்டு வருகின்றன. கடைகள் மூடப்பட்ட பிறகு சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கீரனூர் சோதனைச்சாவடியில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சிவநேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எந்த காரணமும் இல்லாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வீணாக வலம் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினர். மேலும் அவர்களை கபசுர குடிநீர குடிக்க வைத்து, முக கவசத்தை வழங்கி அனுப்பி வைத்தனர். ஊரடங்கு நேரத்தில் போலீசார் விதிகளை மீறுவோரிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஆனால் பேரளம் பகுதியில் போலீசார் ஊரடங்கை மீறியவர்களிடன் கணிவுடன் நடந்து கொண்டதும், கபசுர குடிநீர் குடிக்க வைத்ததும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News