செய்திகள்
விழுப்புரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான 5 பேரை படத்தில் காணலாம்.

விழுப்புரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

Published On 2021-05-19 17:50 GMT   |   Update On 2021-05-19 17:50 GMT
விழுப்புரம் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மேற்பார்வையில் கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையார்குப்பம், அரசு ஊழியர் நகர் ஆகிய இடங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக நடந்து வந்து கொண்டிருந்த 2 பேரை போலீசார், சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 29), பட்டாம்பாக்கத்தை சேர்ந்த ஷேக் என்ற விஜயகணேஷ் (23) என்பதும், இவர்கள் இருவரும் விழுப்புரம் பகுதியில் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த இமாம்கதிர் (48) என்பவர் அப்பகுதியில் நடந்து செல்லும்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர், திடீரென இமாம்கதிரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்ட விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் சற்குணம், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் விரைந்து சென்று ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்ற 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில் அவர், விழுப்புரம் அருகே ஆனாங்கூரை சேர்ந்த பெரியசாமி மகன் அகமதின் (24) என்பதும், தப்பி ஓடிய 4 பேரும் விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த வீரப்பன் மகன் பாலா என்கிற பாலசுந்தரம் (21), விழுப்புரம் தாமரைக்குளத்தை சேர்ந்த குமார் மகன் தமிழரசன் (21), மோகன்மணி மகன் ஜோசப் (20), விழுப்புரம் தேர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் திருக்குமார் (20) என்பதும் தெரிந்தது.

அதன் பின்னர் அகமதின் கொடுத்த தகவலின்பேரில் பாலா உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், கஞ்சா பழக்கம் மூலம் நண்பர்களான அவர்கள் 5 பேரும் விழுப்புரம் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அகமதின் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News