செய்திகள்
கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2021-05-19 06:10 GMT   |   Update On 2021-05-19 06:10 GMT
இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும், விராலி மஞ்சள், கடல் அட்டை உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் அடிக்கடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க கடலோர காவல் படையினரும், பாது காப்பு போலீசார், மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று தாளமுத்து நகரில் இருந்து ஒரு படகில் இருந்த 50 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து அதில் இருந்த வாலிபர்களை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இன்று அதிகாலை கியூ பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 28 மூட்டைகளில் 840 கிலோ விராலி மஞ்சள் மற்றும் 14 மூட்டைகளில் 420 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் அவை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

இதனைத்தொடர்ந்து வேன் டிரைவர் திரேஸ்புரம் மேற்கு பட்டியை சேர்ந்த உமர் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News