தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 644 பேருக்கு அபராதம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக கவசம் அணியாமல் பொதுஇடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதி ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 352 பேர், ஊரக உட்கோட்டத்தில் 30 பேர், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 24 பேர், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 27 பேர், மணியாச்சி உட்கோட்டத்தில் 44 பேர், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 88 பேர், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 55 பேர் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 24 பேர் என மொத்தம் 644 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 1,28,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 13-ந்தேதி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 7 பேர், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேர், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 2 பேர் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேர் என மொத்தம் 14 பேர் மீது சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள் என நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.