செய்திகள்
திருப்பூரில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக முஸ்லிம்கள் வீடுகளிலேயே ரம்ஜான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், அவினாசி,பல்லடம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை புத்தாடை அணிந்து வீடுகள் மற்றும் வீடுகளின் மாடிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இதையடுத்து உறவினர்கள், நண்பர்களுக்கு ரம்ஜான் உணவுகளை வழங்கி மகிழ்ந்தனர். ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசல்களுக்கு சென்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவார்கள். கொரோனாவால் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த முடியாததால் சற்று கவலையடைந்தனர்.
இது குறித்து முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜானையொட்டி பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்துவோம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தடைப்பட்டது.
இந்த ஆண்டு எப்படியும் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி விடலாம் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இந்தாண்டும் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சற்று கவலையை ஏற்படுத்தினாலும் வீடுகளில் தொழுகை நடத்தி இறைவனிடம் பிரார்த்தித்தோம்.
இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கொரோனா முற்றிலும் ஒழிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தோம் என்றனர்.