செய்திகள்
செல்போன் பழுது பார்க்க தாயார் பணம் தராததால் விரக்தி - சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பழுது பார்க்க தாயார் பணம் தராததால் விரக்தி அடைந்த சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
ஆவடி:
திருமுல்லைவாயல் அடுத்த அய்யப்பா நகர் முதல் குறுக்கு தெருவில் வசிப்பவர் மங்கை (வயது 35). இவருடைய கணவர் செல்வராஜ், 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தன்னுடைய மகன் சவுந்தர்ராஜன் (18), மகள் கவுசல்யா (14) ஆகியோருடன் வசித்து வந்தார். சவுந்தர்ராஜன், 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டில் சாப்பிடும் சவுந்தர்ராஜன், இரவில் அதே பகுதி 2-வது தெருவில் உள்ள தங்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் சென்று தூங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த சவுந்தர்ராஜன், தனது தாயார் மங்கையிடம் செல்போன் பழுது பார்க்க பணம் தரும்படி கேட்டார். அதற்கு அவர், தன்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறினார். இதனால் தாயாரிடம் கோபித்துக்கொண்டு வழக்கம்போல் தங்களது ஓட்டு வீட்டில் தூங்க சென்றுவிட்டார்.நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் சவுந்தர்ராஜன் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த மங்கை, அங்கு சென்று பார்த்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் ஜன்னல் போடுவதற்காக இருந்த துளை வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.