செய்திகள்
கோப்புபடம்

பென்னாகரம் அருகே கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - இழப்பீடு கோரி உறவினர்கள் முற்றுகை

Published On 2021-05-06 15:10 GMT   |   Update On 2021-05-06 15:10 GMT
பென்னாகரம் அருகே கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். இழப்பீடு கோரி உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நீர்குந்தி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர் நீர்குந்தி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு தீவனம் வைத்த போது எதிர்பாராதவிதமாக மோகன் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக உறவினர்கள் பென்னாகரம் போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோகனின் உடலை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் மோகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் தனியார் கோழிப்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த மோகனுக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News