செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கோவை மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

Published On 2021-05-06 11:14 GMT   |   Update On 2021-05-06 11:14 GMT
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,329 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் கொரோனா பரவலை கண்டறிய மாவட்டம் முழுவதும் தினசரி பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நேற்று மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 2,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,261 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது மூதாட்டி, 30 வயது ஆண், 54 வயது ஆண் உள்பட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 736 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,329 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76,206 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 9,319 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதல் அலை கொரோனா பரவலின் போது கடந்த ஆண்டு மே மாதம் 6-ந் தேதி கோவையில் 146 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இருந்தது. இது தற்போது படிப்படியாக உயர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86,261 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News